Tuesday, October 31, 2017

அத்தியாயம் : 10 பாங்கு ஹதீஸ் 668 முதல் 686 வரை




                                                                     அத்தியாயம் : 10

                                                                              كتاب الأذان
    
                                                                               பாங்கு





(41)باب هَلْ يُصَلِّي الإِمَامُ بِمَنْ حَضَرَ وَهَلْ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فِي الْمَطَرِ
பாடம் : 41

(மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்திருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா? வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா?

٦٦٨حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، صَاحِبُ الزِّيَادِيِّ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ، قَالَ خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ ذِي رَدْغٍ، فَأَمَرَ الْمُؤَذِّنَ لَمَّا بَلَغَ حَىَّ عَلَى الصَّلاَةِ‏.‏ قَالَ قُلِ الصَّلاَةُ فِي الرِّحَالِ، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَكَأَنَّهُمْ أَنْكَرُوا فَقَالَ كَأَنَّكُمْ أَنْكَرْتُمْ هَذَا إِنَّ هَذَا فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي ـ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ـ إِنَّهَا عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ‏.‏ وَعَنْ حَمَّادٍ عَنْ عَاصِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنِ ابْنِ عَبَّاسٍ نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ كَرِهْتُ أَنْ أُؤَثِّمَكُمْ، فَتَجِيئُونَ تَدُوسُونَ الطِّينَ إِلَى رُكَبِكُمْ‏.‏

668 அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சேறும் சகதியும் நிறைந்த (மழை தூறிக் கொண்டிருந்த) ஒரு (ஜுமுஆ) நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். பாங்குசொல்பவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்என்று சொல்லப்போன போது (உங்கள்) இருப்பிடங் களிலேயே தொழுதுகொள்ளுங்கள் (அஸ்ஸலாத்து ஃபிர் ரிஹால்) என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அதை வெறுப்பது போன்று அ(ங்கிருந்த)வர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவ்வாறு நான் செய்தது உங்களுக்குப் பிடிக்கவில்லை போன்று தெரிகிறது. ஜுமுஆ கட்டாயமானதாக இருந்தும் என்னை விடச் சிறந்தவர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்தார்கள். உங்களுக்கு சிரமம் கொடுப்பதை நான் வெறுத்தேன் (எனவேதான் இருப்பிடங்களிலேயே தொழச் சொன்னேன்) என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், நீங்கள் முழங்கால் வரை சகதியை மிதித்துக் கொண்டு வருமளவிற்கு உங்களுக்கு சிரமம் சொடுப்பதை நான் வெறுத்தேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

٦٦٩حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ سَأَلْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ فَقَالَ جَاءَتْ سَحَابَةٌ فَمَطَرَتْ حَتَّى سَالَ السَّقْفُ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، فَأُقِيمَتِ الصَّلاَةُ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْجُدُ فِي الْمَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ‏.

669 அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (லைலத்துல் கத்ர் எனும் கண்ணியமிக்க இரவு பற்றிக்) கேட்டேன். அப்போது அவர்கள் (குறிப்பிட்டவற்றில் பின்வருமாறும்) கூறினார்கள்:

(திடீரென) ஒரு மேகம் வந்து மழை பொழிந்தது. அதனால் பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அப்போது அந்தக் கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்(டு தொழுகை நடத்தப்பட்)டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈரமான களி மண்ணில் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததால் அவர்களது நெற்றியில் களி மண்ணின் அடையாளத்தைக் கண்டேன்.

٦٧٠حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ‏.‏ وَكَانَ رَجُلاً ضَخْمًا، فَصَنَعَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم طَعَامًا فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ، فَبَسَطَ لَهُ حَصِيرًا وَنَضَحَ طَرَفَ الْحَصِيرِ، صَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الْجَارُودِ لأَنَسٍ أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى قَالَ مَا رَأَيْتُهُ صَلاَّهَا إِلاَّ يَوْمَئِذٍ‏.


670 அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவர் (நபி ஸல் அவர்களிடம்) என்னால் (பள்ளிவாசலுக்கு வந்து) உங்களுடன் தொழ முடிவதில்லை என்று கூறினார் (ஏனெனில்) அவர் உடல் பருமனான மனிதராக இருந்தார். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களுக்காக உணவு தயார் செய்து தம் இல்லத்திற்கு வருமாறு அவர்களை அழைத்தார். (அவருடைய இல்லத்திற்கு நபி ஸல் அவர்கள் வந்த போது) நபி (ஸல்) அவர்களுக்காக பாயொன்றை விரித்து (பதப்படுத்துவதற்காக) அந்தப் பாயின் ஓரத்தில் தண்ணீர் தெளித்தார். அந்தப் பாயில் நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.



அப்போது ஜாரூத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுபவ ர்களாக இருந்தார்களா? என்று கேட்டார். அதற்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், அன்றைய தினம் தவிர வேறு எப்போதும் அவர்கள் ளுஹா தொழுகை தொழுவதை நான் கண்டதில்லை என்று கூறினார்கள்.

(42)باب إِذَا حَضَرَ الطَّعَامُ وَأُقِيمَتِ الصَّلاَةُ
பாடம் : 42

உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?)

وَكَانَ ابْنُ عُمَرَ يَبْدَأُ بِالْعَشَاءِ.
وَقَالَ أَبُو الدَّرْدَاءِ مِنْ فِقْهِ الْمَرْءِ إِقْبَالُهُ عَلَى حَاجَتِهِ حَتَّى يُقْبِلَ عَلَى صَلاَتِهِ وَقَلْبُهُ فَارِغٌ


(இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்).

ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசாலித் தனமாகும் என அபூத் தர்தா(ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

٦٧١حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، سَمِعْتُ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ إِذَا وُضِعَ الْعَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ ‏"‏‏.‏

671 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.)

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٦٧٢حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا قُدِّمَ الْعَشَاءُ فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ الْمَغْرِبِ، وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ ‏"‏‏.‏


672 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன் உங்கள் முன்னால் உணவு வைக்கப்படுமானால்

முதலில் உணவை உண்ணுங்கள். அந்த உணவை விடுத்து (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.

இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

٦٧٣حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلاَةُ فَابْدَءُوا بِالْعَشَاءِ، وَلاَ يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ ‏"‏‏.‏ وَكَانَ ابْنُ عُمَرَ يُوضَعُ لَهُ الطَّعَامُ وَتُقَامُ الصَّلاَةُ فَلاَ يَأْتِيهَا حَتَّى يَفْرُغَ، وَإِنَّهُ لَيَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ‏.‏


673 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருக்கு முன் இரவு உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்க தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை (உண்டு)முடிக்கும் வரை (தொழுகைக்காக) அவசரப்படவேண்டாம்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும். அவர்கள் (சாப்பிட்டு) முடிக்காத வரை தொழுகைக்குச் செல்லமாட்டார்கள். அப்போது இமாம் ஓதுவதைக் கேட்ட படியே (சாப்பிட்டுக் கொண்டு) இருப்பார்கள்.

٦٧٤وَقَالَ زُهَيْرٌ وَوَهْبُ بْنُ عُثْمَانَ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ إِذَا كَانَ أَحَدُكُمْ عَلَى الطَّعَامِ فَلاَ يَعْجَلْ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ، وَإِنْ أُقِيمَتِ الصَّلاَةُ ‏"‏‏.‏ رَوَاهُ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ عَنْ وَهْبِ بْنِ عُثْمَانَ، وَوَهْبٌ مَدِينِيٌّ‏.‏


674 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவர் தம் தேவையை முடிப்பதற்கு முன்பாக அவசரப்ப(ட்டு எழுந்துவி)ட வேண்டாம். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டாலும் சரியே!

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(43)باب إِذَا دُعِيَ الإِمَامُ إِلَى الصَّلاَةِ وَبِيَدِهِ مَا يَأْكُلُ
பாடம் : 43

இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்...

٦٧٥حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي جَعْفَرُ بْنُ عَمْرِو بْنِ أُمَيَّةَ، أَنَّ أَبَاهُ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ ذِرَاعًا يَحْتَزُّ مِنْهَا، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ فَقَامَ فَطَرَحَ السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ‏.

675 அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த கத்தியால் ஆட்டுச்) சப்பையைத் துண்டு போட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன் அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் கத்தியை கீழேபோட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். புதிதாக அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.

(44)باب مَنْ كَانَ فِي حَاجَةِ أَهْلِهِ فَأُقِيمَتِ الصَّلاَةُ فَخَرَجَ
பாடம் : 44

வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும்.

٦٧٦حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ ـ تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ ـ فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ‏.‏

676 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்துவந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ரலி) அவர் களிடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டுவிட்டு) தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

(45)باب مَنْ صَلَّى بِالنَّاسِ وَهْوَ لاَ يُرِيدُ إِلاَّ أَنْ يُعَلِّمَهُمْ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُنَّتَهُ
பாடம் : 45

நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது.

٦٧٧حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، قَالَ حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ جَاءَنَا مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ فِي مَسْجِدِنَا هَذَا فَقَالَ إِنِّي لأُصَلِّي بِكُمْ، وَمَا أُرِيدُ الصَّلاَةَ، أُصَلِّي كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي‏.‏ فَقُلْتُ لأَبِي قِلاَبَةَ كَيْفَ كَانَ يُصَلِّي قَالَ مِثْلَ شَيْخِنَا هَذَا‏.‏ قَالَ وَكَانَ شَيْخًا يَجْلِسُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ قَبْلَ أَنْ يَنْهَضَ فِي الرَّكْعَةِ الأُولَى‏.


677 அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களது இந்த (பஸ்ரா) பள்ளிவாசலுக்கு மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் வந்து, உங்களுக்கு நான் தொழுகை நடத்தப்போகிறேன். (கடமையான) தொழுகையை தொழுவிப்பது என் நோக்கமன்று. நபி (ஸல்) அவர்களை எவ்வாறு நான் தொழுகக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன் என்று கூறி(விட்டு தொழுது காட்டி)னார்கள்.

இதன் அறிவிப்பாளர் அய்யூப் அஸ்ஸக்தியானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அபூகிலாபா (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) எவ்வாறு தொழுவார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதோ (அம்ர் பின் சலமா எனும்) இந்த பெரியவரைப் போன்றே தொழுவார்கள் என்று பதிலளித்தார்கள்.

அம்ர் பின் சலமா முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக எழுவதற்கு முன் (நிலைக்கு உயரும் போது சிறிது) அமர்ந்துவிட்டு எழும் முதியவராக இருந்தார்.

(46)باب أَهْلُ الْعِلْمِ وَالْفَضْلِ أَحَقُّ بِالإِمَامَةِ
பாடம் : 46

கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார்.

٦٧٨حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ مَرِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَدَّ مَرَضُهُ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ إِنَّهُ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ‏.‏ قَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏ فَعَادَتْ فَقَالَ ‏"‏ مُرِي أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ ‏"‏‏.‏ فَأَتَاهُ الرَّسُولُ فَصَلَّى بِالنَّاسِ فِي حَيَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏


678 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் அந்திமக் காலத்தில்) நோய்வாய்ப்ட்டார்கள். அவர்களது நோய் கடுமையான போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள் என்று (தம் அருகில் இருந்தவர்களிடம்) கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாகத் துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடையவர். (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நிற்கும் போது (மனம் நெகிழ்ந்து அழுதுவிடுவார்கள். எனவே) அவர்களால் மக்களுக்கு தொழுவிக்க முடியாது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும் படி சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். நான் முன்பு சொன்ன பதிலையே மீண்டும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு தொழுகை நடத்தச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் தூதுவராக ஒருவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (தொழுவிக்கும் படி) சொன்னார். எனவே அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது (அவர்கள் இறக்கும் வரை) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்

٦٧٩حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ أَنَّهَا قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي مَرَضِهِ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لِحَفْصَةَ قُولِي لَهُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ الْبُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ‏.‏ فَفَعَلَتْ حَفْصَةُ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَهْ، إِنَّكُنَّ لأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ ‏"‏‏.‏ فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ مَا كُنْتُ لأُصِيبَ مِنْكِ خَيْرًا‏.‏

679 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது, அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நான், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற் காக) நீங்கள் நிற்குமிடத்தில் நின்றால் அவர்கள் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்களால் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (நபி ஸல் அவர்களிடம்) கூறினேன்.

மேலும் (நபி ஸல் அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஹஃப்ஸாவிடம், அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுவதற்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து) அழுவதனால் மக்களுக்கு அவர்கள் (குர்ஆனை ஓதிக்) கேட்கச் செய்ய முடியாது. எனவே, மக்களுக்கு உமர் (ரலி) அவர்களை தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி சொன்னேன். அவ்வாறே ஹஃப்ஸா அவர்கள் (நான் சொன்ன படி) செய்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (போதும்) நிறுத்துங்கள்! நிச்சயமாக நீங்கள்தாம் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள். அபூபக்ர் அவர் களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். அப்போது ஹஃப்ஸா என்னிடம், உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை என்று கூறினார்.


٦٨٠حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ الأَنْصَارِيُّ ـ وَكَانَ تَبِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَخَدَمَهُ وَصَحِبَهُ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ النَّبِيِّ صلى الله عليه وسلم الَّذِي تُوُفِّيَ فِيهِ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الاِثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلاَةِ، فَكَشَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم سِتْرَ الْحُجْرَةِ يَنْظُرُ إِلَيْنَا، وَهْوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ، فَهَمَمْنَا أَنْ نَفْتَتِنَ مِنَ الْفَرَحِ بِرُؤْيَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَارِجٌ إِلَى الصَّلاَةِ، فَأَشَارَ إِلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ، وَأَرْخَى السِّتْرَ، فَتُوُفِّيَ مِنْ يَوْمِهِ‏.‏

680 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களை (ஒவ்வொரு விஷயங்களிலும்) பின்பற்றுபவரும், நபியவர்களின் சேவகருமான நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எந்த நோயில் நபி (ஸல்) அவர்கள் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது அபூபக்ர் (ரலி) அவர்களே மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். மக்கள் திங்கட் கிழமையன்று (ஃபஜ்ர்) தொழுகையில் வரிசையில் நின்று கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் (ஆயிஷா ரலி அவர்களது) அறையின் திரையை விலக்கி, நின்று கொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் புத்தகத்தின் பக்கத்தைப் போல் (பொலிவுடன்) இருந்தது. பிறகு அவர்கள் (எங்களைப் பார்த்து) மகிழ்ந்தவர்களாய் புன்னகை புரிந்தார்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியினால் நாங்கள் (தொழுகையில் கவனம் சிதறி) குழம்பிவிடுவோமா என்று எண்ணிணோம் அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்என்று (தம் கரத்தால்) சைகை செய்தார்கள்; (பிறகு அறைக்குள் நுழைந்து கொண்டு) திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்தார்கள்.

٦٨١حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ، قَالَ لَمْ يَخْرُجِ النَّبِيُّ صلى الله عليه وسلم ثَلاَثًا، فَأُقِيمَتِ الصَّلاَةُ، فَذَهَبَ أَبُو بَكْرٍ يَتَقَدَّمُ فَقَالَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحِجَابِ فَرَفَعَهُ، فَلَمَّا وَضَحَ وَجْهُ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا نَظَرْنَا مَنْظَرًا كَانَ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ وَضَحَ لَنَا، فَأَوْمَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ، وَأَرْخَى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحِجَابَ، فَلَمْ يُقْدَرْ عَلَيْهِ حَتَّى مَاتَ‏.


681 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக அமர்ந்து எங்களுக்கு தொழுகை நடத்திவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் தெரிந்த போது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்,) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களின் முகத்தைவிட மகிழ்வூட்டும் எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை (எனும் அளவிற்கு மகிழ்ந்தோம்). அப்போது நபி (ஸல்) அவர்கள் (பின்வாங்க முற்பட்ட) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் முன்னே செல்லுமாறு (மக்களுக்குத் தொழுவிக்கு மாறு) தமது கரத்தால் சைகை செய்தார்கள் (பிறகு அறையின்) திரையைத் தொங்க விட்டுவிட்டார்கள். பிறகு அதற்குக்கூட இயலாமல் இறந்துவிட்டார்கள்.

٦٨٢حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعُهُ قِيلَ لَهُ فِي الصَّلاَةِ فَقَالَ ‏"‏ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ ‏"‏‏.‏ قَالَتْ عَائِشَةُ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَرَأَ غَلَبَهُ الْبُكَاءُ‏.‏ قَالَ ‏"‏ مُرُوهُ فَيُصَلِّي ‏"‏ فَعَاوَدَتْهُ‏.‏ قَالَ ‏"‏ مُرُوهُ فَيُصَلِّي، إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ ‏"‏‏.‏ تَابَعَهُ الزُّبَيْدِيُّ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ وَإِسْحَاقُ بْنُ يَحْيَى الْكَلْبِيُّ عَنِ الزُّهْرِيِّ‏.‏ وَقَالَ عُقَيْلٌ وَمَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ حَمْزَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم‏.‏

682 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்திமக்காலத்தில் நோயின்) வேதனை அதிகமான போது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்தும்படி சொல்லுங்கள் என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், (என்தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (அதிகமாக துக்கப்படுகின்ற) இளகிய மனம் உடைய மனிதர். (நீங்கள் நிற்குமிடத்தில் நின்று) அவர்கள் குர்ஆன் ஓதினால் அவர்களுக்கு அழுகை மேலிட்டுவிடும் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் முன்பு சொன்னதையே மீண்டும் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் முன்போன்றே அவரைத் தொழுவிக்கச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (இறைத்தூதர்) யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள் நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று சொன்னார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.


(47)باب مَنْ قَامَ إِلَى جَنْبِ الإِمَامِ لِعِلَّةٍ
பாடம் : 47

ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது.

٦٨٣حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَ أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي مَرَضِهِ، فَكَانَ يُصَلِّي بِهِمْ‏.‏ قَالَ عُرْوَةُ فَوَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ فَإِذَا أَبُو بَكْرٍ يَؤُمُّ النَّاسَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ اسْتَأْخَرَ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ كَمَا أَنْتَ، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِذَاءَ أَبِي بَكْرٍ إِلَى جَنْبِهِ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ‏.‏

683 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்திமக் காலத்தில்) நோயுற்றிருந்த போது மக்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்களை (இமாமாக நின்று) தொழுவிக்குமாறு பணித்தார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளரான) உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தமது நோய் சற்றுக் குறைந்திருக்கக் கண்ட போது (இரண்டு மனிதர்களை கைத்தாங்கலாக்கி) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், பின் வாங்க முயன்றார்கள். அப்படியே இருங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அப்போது மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள்.

(48)باب مَنْ دَخَلَ لِيَؤُمَّ النَّاسَ فَجَاءَ الإِمَامُ الأَوَّلُ فَتَأَخَّرَ الأَوَّلُ أَوْ لَمْ يَتَأَخَّرْ جَازَتْ صَلاَتُهُ
பாடம் : 48

ஒருவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்க ஆரம்பித்துவிட, (வழக்கமாகத் தொழுவிக்கும்) முதலாவது இமாம் வந்து விட்டால், தொழுவித்துக் கொண்டிருக்கும் அவர் பின்வாங்கினாலும் பின்வாங்கா விட்டாலும் அவருடைய தொழுகை நிறைவேறிவிடும்.

٦٨٤حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ فَحَانَتِ الصَّلاَةُ فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ قَالَ نَعَمْ‏.‏ فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسُ فِي الصَّلاَةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ ـ وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ ـ فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنِ امْكُثْ مَكَانَكَ، فَرَفَعَ أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ ‏"‏ يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ ‏"‏‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ لاِبْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ مَنْ رَابَهُ شَىْءٌ فِي صَلاَتِهِ فَلْيُسَبِّحْ، فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ ‏"‏‏.‏


684 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குபாவில் இருந்த பனூஅம்ர் குலத்தாரிடையே தகராறு நிகழ்ந்துவிட்டதாகச் செய்தி வந்ததை யொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி ஸல் அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் ரலி அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார்கள் ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் (மக்களுக்குத் தலைமை தாங்கி) தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி ஸல் வந்துவிட்டதைத் தெரிவிக்க) கைத்தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப்பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்தற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக) தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), உங்களை ஏன் அதிகமாகக் கைத்தட்டக் கண்டேன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டுவிட்டால் அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

(49)باب إِذَا اسْتَوَوْا فِي الْقِرَاءَةِ فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ
பாடம் : 49

குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும்.

٦٨٥حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، قَالَ قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ، فَلَبِثْنَا عِنْدَهُ نَحْوًا مِنْ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَحِيمًا فَقَالَ ‏ "‏ لَوْ رَجَعْتُمْ إِلَى بِلاَدِكُمْ فَعَلَّمْتُمُوهُمْ، مُرُوهُمْ فَلْيُصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ ‏"‏‏.‏


685 மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவுக்குச்) சென்று ஏறத்தாழ இருபது நாட்கள் அவர்களிடம் தங்கியிருந்தோம் .-நபி (ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர் களாக இருந்தார்கள் (பிறகு நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல ஆசைப் படுவதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் ஊர்களுக்குத் திரும்பிச் சென்றால் நீங்கள் கற்றிருப்பதை அவர்களுக்கும் கற்றுக் கொடுங்கள்; (கடமையானவற்றைச் செய்யுமாறு) அவர்களைப் பணியுங்கள். இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள்; இன்ன தொழுகையை இந்த நேரத்தில் தொழுங்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் உங்களுக்காக உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும். உங்களில் (வயதில்) பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று கூறினார்கள்

(50)باب إِذَا زَارَ الإِمَامُ قَومًا فَأَمَّهُمْ
பாடம் : 50

இமாம் ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம்.

٦٨٦حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي مَحْمُودُ بْنُ الرَّبِيعِ، قَالَ سَمِعْتُ عِتْبَانَ بْنَ مَالِكٍ الأَنْصَارِيَّ، قَالَ اسْتَأْذَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَذِنْتُ لَهُ فَقَالَ ‏ "‏ أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ ‏"‏‏.‏ فَأَشَرْتُ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي أُحِبُّ، فَقَامَ وَصَفَفْنَا خَلْفَهُ ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا‏.‏


686 இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் வீட்டில் தொழவாருங்கள் என்று நான்விடுத்த வேண்டுகோளை ஏற்று வந்த,) நபி (ஸல்) அவர்கள், என் வீட்டிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தேன். உங்கள் வீட்டில் நான் எந்த இடத்தில் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்? என்று கேட்டார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்கு சுட்டிக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்றார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றோம். (தொழுதோம்) பின்னர் அவர்கள் சலாம் கொடுத்தார்கள்; நாங்களும் சலாம் கொடுத்தோம்




No comments:

Post a Comment