Thursday, November 10, 2016

இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? ( பகுதி 12 )


இறை நேசர்களைக் கண்டறிய முடியுமா? 
ஒட்டகத்தைத் திருடியவர்களைப் பற்றி நபிகளின் கணிப்பு பொய்த்தது!
இதே போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்துள்ளது.
"உக்ல்'' குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது. அவர்களுக்கு மதீனாவின் சூழல் ஒத்துக் கொள்ளவில்லை இல்லை. ஆகவே அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்'' என்று கேட்டார்கள். அதற்கு  நபி  (ஸல்) அவர்கள், "நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை'' என்று பதிலளித்தார்கள். உடனே, (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும், பாலையும் குடித்தார்கள். (அதனால்)  உடல்  நலம் பெற்றுப் பருமனாக ஆனார்கள். மேலும், ஒட்டகம் மேய்ப்பவனைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்று விட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்ற பின் நிராகரித்து விட்டார்கள் என்று ஒருவர் இரைந்து சத்தமிட்ட படி  நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி  (ஸல்)  அவர்கள் "உக்ல்' குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பி வைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்)  கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும் கால்களையும் நபி (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். பிறகு, ஆணிகளைக்  கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டு வரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களுடைய கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள். அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) "ஹர்ரா' எனுமிடத்தில் எறிந்து விட்டார்கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும் வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 3018
மேலும் இந்தச் செய்தி புகாரியில் 1051, 4192, 4610, 5685, 5686, 5728, 6802, 6804, 6805, 6899 ஆகிய இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக வரவில்லை. ஒட்டகத்தைத் திருடுவதற்காக தான் வந்தனர். நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டோம் என்று பொய் சொன்னார்கள். உள்ளத்தை அறிந்து, இவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறியக் கூடியவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தால் ஏமாந்திருக்க மாட்டார்கள். ஒரு காவலரைப் பலி கொடுத்திருக்கவும் மாட்டார்கள். ஒட்டகத்தையும் இழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் துரோகம் செய்த பிறகுதான் இவர்கள் துரோகிகள் என்று நபியவர்களுக்குத் தெரிகிறது.
இதை நாம் எதற்காக இங்கே சுட்டிக்காட்டுகிறோம் என்றால் நாம் ஒருவரை அவ்லியா என்று நினைத்து, அவருக்கு விழா நடத்துகிறோம். கந்தூரி கொண்டாடுகிறோம். அவர் அவ்லியா என்பதற்கு என்ன ஆதாரம்? அவரை அவ்லியா என்று சொன்னது யார்? அவ்லியா என்ற ஒருவர் இந்தக் கப்ரில் அடங்கியிருக்கிறாரா? அப்படி ஒருவர் இந்த உலகத்தில் வாழ்ந்தாரா? அப்படியே வாழ்ந்து அவர் நல்ல செயல்களைத் தான் செய்தார் என்று நீங்கள் பார்த்தீர்களா? அப்படியே நல்ல செயல் செய்தாலும், அதை வெளிப்படையாகச் செய்திருக்கலாம். ஆனால் அது அவருடைய உள்ளத்தில் இருந்ததா? அல்லது நல்லவனைப் போல் நடிப்பதற்காகச் செய்தாரா? இது போன்ற ஏராளமான கேள்விகள் இதில் எழுகின்றன. அவ்லியா பட்டம் கொடுப்போர் இந்தக் கேள்விகளுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.
யூதப் பெண் ஒருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது.  அவர்கள், "வேண்டாம்'' என்று கூறி விட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 2617
நல்லவள் என நம்பித்தான் அந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டார்கள். தன்னைக் கொல்வதற்காக இதைத் தருகிறாள் என அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது.
அப்படியானால் நாம் கொடுக்கும் அவ்லியா பட்டத்தின் நிலை என்னவாகும்?
வெளிப்படையாக எவன் நல்ல செயல் செய்கிறானோ அவன் நம் பார்வையில் நல்லவனாகத் தென்படுவான். வெளிப்படையாகவும் நல்ல செயல்கள் இருந்து, உள்ளமும் பரிசுத்தமாக இருந்தால்தான் அல்லாஹ்விடத்தில் ஒருவன் நல்லவனாக முடியும்.

No comments:

Post a Comment