Monday, November 7, 2016

அன்னை ஸவ்தா ( ரழி )



 அன்னை ஸவ்தா ( ரழி )

கி.பி 566ம் ஆண்டு , ஸம் ஆ அப்துஷ் ஷம்ஸ் அஷ்ஷு முஸ் பின் த் கைஸ் தம்பதியினருக்கு மகளாக அன்னை ஸவ்தா பின் த் ஸம் ஆ ( ரழி ) பிறந்தார்கள் . இவருக்கு அப்துல்லாஹ் பின் ஸம் ஆ என்ற சகோதரரும் உண்டு.

ஸவ்தா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் முடிப்பதற்கு முன்னால் ஸக்ரான் பின் அம்ர் எனபாரைத் மணமுடித்திருந்தார்கள் . அவர் மூலமாக ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஜந்து அல்லது ஆறு குழந்தைகள் இருந்தன.

இஸ்லாத்தை ஆரம்ப கட்டத்தில் ஏற்றவர்களில் அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களும் ஒருவர் . குறைஷிகளின் கடும் எதிர்ப்பு , அளவிலாத் தொல்லைகள் இவற்றையெல்லாம் மீறி அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களும் அவர்களுடைய கணவர் ஸக்ரான் ( ரழி ) அவர்களும் உண்மை மார்க்கத்தை ஏற்றார்கள். இதனால் தம் இனத்தவரான அப்துஷ்ஷம்ஸ் கூட்டத்தினரின்
கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

கொடுமைகள் எல்லை மீறிய காரணத்தால் தங்களின் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள , இரண்டாவதாக அபீசீனியா சென்ற குழுவோடு அவர்களும் சென்றார்கள் . இதனால் குறைஷிகள் மற்றும் தம் சமூகத்தாரின் கொடுமைகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றனர்.

மக்காவில் எதிர்ப்பு குறைந்து மக்கள் இஸ்லாத்தில் இணைகிறார்கள் என்ற தவறான தகவலின் அடிப்படையில் அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களும் , அவர்களது கணவர் ஸக்ரான் ( ரழி )
அவர்களும் மக்கா திரும்பினர். சில ஆண்டுகளில் ஸக்ரான் ( ரழி ) அவர்கள் மரணமடைந்தார்கள் . ஜந்து அல்லது ஆறு குழந்தைகளுடன் அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் விதவையாக
மக்காவில் வாழ்க்கையைத் தொடர்ந்தார்கள்.

கதீஜா ( ரழி ) அவர்களை இழந்து மூன்றாண்டுகள் கழிந்த நிலையில் இருந்த நபி ( ஸல் ) அவர்களைக் கண்ட உஸ்மான் பின் மழ் ஊன் ( ரழி ) அவர்களின் துணைவியார் கவ்லா பின் த் ஹகீம் (ரழி ) அவர்கள் , " அல்லாஹ்வின் தூதரே ! நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ? என்று கேட்டார் . அப்போது நபி ( ஸல் ) அவர்கள் , " யாரைத் திருமணம் செய்வது ?" என்று வினவினார்கள் . " நீங்கள் விரும்பினால் கன்னியையோ , விதவையையோ திருமணம் செய்யலாம் " என்று பதிலளித்தார்.

" கன்னி யார் ? விதவை யார்என்று நபி ( ஸல் ) அவர்கள் கேட்டார்கள். " அல்லாஹ்வின் படைப்பில் தங்களுக்கு அதிக விருப்பமுள்ள நபர் அபூபக்ர் ( ரழி ) ஆவார். அவர்களின் மகள்
ஆயிஷா கன்னியாவார். உங்கள் மார்க்கத்தை ஏற்று உங்களைப் பின்பற்றும் ஸவ்தா பின் த் ஸம் ஆ ( ரழி ) அவர்கள் விதவையாவார் " என்று கவ்லா ( ரழி ) பதிலளித்தார்.

" அவ்விருவரிடமும் என்னைப் பற்றி எடுத்து சொலலுங்கள் " என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . கவ்லா ( ரழி ) அவர்கள் ஆயிஷா ( ரழி ) அவர்களின் தாயார் உம்மு ரூமான்
( ரழி ) அவர்களிடம் சென்று ." அல்லாஹ் உங்களுக்கு அளப்பரிய நன்மைகளையும் அருளையும் கொடுத்துள்ளான் " என்றார் ," என்ன விஷயம் ? " என்று உம்மு ரூமான் ( ரழி ) வினவினார். நபி ( ஸல் ) அவர்கள் ஆயிஷாவைத் திருமணம் செய்ய எண்ணுகிறார்கள் :" என்று பதிலளித்தார் . உடனே உம்மு ரூமான் ( ரழி ) , " அபூபக்ர் இப்போது வந்து விடுவார்;
அவரை எதிர்பாருங்கள் என்று கூறினார்.

அபூபக்ர் ( ரழி ) வந்த போது , கவ்லா ( ரழி) அவர்கள் விஷயத்தை எடுத்துக் கூறினார்கள். " நபி ( ஸல் ) அவர்களுக்கு அவர்களது சகோதரர் மகள் திருமணம் புரிய ஏற்றவரா ? " என்றார்கள் . இதைக் கவ்லா ( ரழி ) நபி ( ஸல் ) அவர்களிடம் தெரிவித்த போது , " இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் நான் அவருக்கும் , அவர் எனக்கும் சகோதரர் ஆவோம் அவருடைய
மகள் எனக்குத் திருமணம் புரிய ஏற்றவர் தான் " என்று கூறியனுப்பினார்கள் . இதை அபூபக்ர் ( ரழி ) யிடம் கூறிய போது , நபி ( ஸல் ) அவர்களை இங்கே அழைத்து வாருங்கள் "
என்று கூறினார்கள்.

நபி ( ஸல் ) அவர்கள் வந்த போது. அபூபக்ர் ( ரழி ) அவர்கள் ஆயிஷாவைத் திருமணம் முடித்து வைத்தார்கள். பின்னர் கவ்லா ( ரழி ) அவர்கள் , ஸவ்தா ( ரழி ) யிடம் சென்றார்கள்
ஸவ்தா ( ரழி ) யின் தந்தை மக்காவில் இருந்தவர். இலகுவாக ஹாஜ் கூட செய்ய முடியும் என்றாலும் அவர் வயது முதிர்ந்திருந்ததால் அதைக் கூட செய்ய முடியவில்லை . கவ்லா ( ரழி ) அவர்களைக் கண்ட அம்முதியவர் அறியாமைக் கால வழக்கப்படி , " நல்ல காலையாக அமையட்டும் " என்று கூறி விட்டு , நீ யார் ? என்று வினவினார்.

"கவ்லா பின் த் ஹகீம் " என்று கவ்லா ( ரழி ) பதிலளித்த போது , அவர் மகிழ்ச்சியடைந்தார் . அல்லாஹ் நாடியவற்றைப் பேசினார். பின்னர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது
ஸவ்தாவைப் பெண் கேட்கிறார் " என்று கூறினார்கள் . அதற்கு அவர் " கண்ணியமான பொருத்தம் " என்றார் . " உம்முடைய தோழி ( ஸவ்தா ) என்ன கூறுகின்றார் ? " என்று வினவிய
போது , " அவரும் விரும்பவே செய்கிறார் " என்றார்கள் . பின்னர் நபி ( ஸல் ) அவர்களை அழைத்து வரும்படி கூறி ஸவ்தா ( ரழி ) அவர்களைத் திருமணம் செய்து வைத்தார்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்கள் : பைஹகீ 13526 அஹ்மத் 24587 தப்ரானீ , பாகம் 24 , பக்கம் 30




நபி ( ஸல் ) அவர்கள் திருமண விருப்பம் வெளியிட்ட போது முந்தைய கணவர் மூலம் ஜந்து அல்லது ஆறு குழந்தைகள் இருந்ததால் திருமணத்திற்கு ஸவ்தா ( ரழி ) தயக்கம் காட்டியதாகக் கூறும் செய்தியும் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளது.

நபி ( ஸல் ) அவர்கள் சமூகத்தில் ஸவ்தா என்று சொல்லப்படும் பெண்ணை பெண் பேசினார்கள் . அப்பெண்மணி இறந்து விட்ட தனது கணவர் மூலமாக ஜந்து அல்லது ஆறு குழந்தைகளைப் பெற்றிருந்தார். (திருமணத்திற்கு அவர் தயங்கிய போது ) " என்னைத் திருமணம் செய்ய உம்மைத் தடுத்து எது ? " என்று நபி ( ஸல் ) அவர்கள் வினவினார்கள்
அதற்கவர் , :" அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ்வின் மீதாணையாக ! மனிதர்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமான உங்களைத் திருமணம் செய்வதை விட்டும் என்னை எதுவும்
தடுக்கவில்லை , எனினும் என் குழந்தைகள் உங்களிடம் காலையிலும் மாலையிலும் வந்து அழுவார்கள் அவர்களின் உணவிற்காக வேண்டுமானால் உங்களுக்கு சேவை செய்கிறேன்"
என்று கூறினார்கள். " இதைத் தவிர வேறு எதுவும் உம்மை தடுக்கவில்லையா ? " என்று நபி ( ஸல் ) அவர்கள் வினவிய போது , ஆம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி ( ஸல் )
அவர்கள் ஸவ்தாவை நோக்கி , " அல்லாஹ் உன் மீது அருள் புரிவானாக ! குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு ஒட்டகத்தில் பயணிக்கும் பெண்களில் சிறந்தவர்கள் , குறைஷிக் குலத்திலுள்ள நல்ல பெண்கள் தான் . ( அவர்கள் ) தம் சிறு குழந்தைகளை பேணி வளர்க்கிறார்கள் . தன் கணவனின் சொத்துக்களைப் பராமரிக்கிறார்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ( ரழி )
நூல்        : அஹ்மத் 2774

ஸவ்தா ( ரழி ) அவர்கள்  , நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்தியை ஹஜ் செய்து விட்டு வந்தவுடன் அறிந்த அவரது சகோதரர் அப்து பின் ஸம் ஆ ( ரழி ) தமது தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள் . அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு தாம் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது எவ்வளவு பெரிய அறியாமை என்பதை அறிந்து வருத்தப்பட்டார்கள்.

நூல்கள் : அஹ்மத் 24587 தப்ரானீ பாகம் 24 பக்கம் 30

நபி ( ஸல் ) அவர்கள் இவ்விருவரில் யாரை முதலில் திருமணம் புரிந்தார்கள் ? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது . ஸவ்தா ( ரழி ) ஆயிஷா ( ரழி ) ஆகிய இருவரின் திருமணமும் மிக நெருக்கமான கட்டத்தில் நடந்ததால் இந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் நபி ( ஸல் ) அவர்கள்  ஆயிஷா ( ரழி ) அவர்களை முதலில் திருமணம் செய்தார்கள் என்று கூறப்படுகின்றது . முஸ்லிம் ( 2900 வது ) அறிவிப்பில் , எனக்குப் பிறகு தான் ஸவ்தா ( ரழி ) அவர்களைத் திருமணம் செய்தார்கள்
என்று ஆயிஷா ( ரழி ) மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள் . இப்னு கஸீர் உட்பட பல அறிஞர்கள் நபி ( ஸல் ) அவர்கள் முதலில் ஆயிஷா ( ரழி ) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்ற கருத்தையே ஏற்கின்றனர்.

நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் செய்த ஸவ்தா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா சென்ற போது அவர்களுடன் சென்றார்கள். அங்கு வாழ்க்கையைத் தொடங்கினார்கள் . நபி ( ஸல் ) அவர்களைத் திருமணம் செய்த போது அவர்களுக்கு அதிக வயதாக இருந்தது. மதீனாவிற்கு வந்த பின் இன்னும் வயது
அதிகமானதால் அவர்களுக்கு இல்லறத்தில் நாட்டம் குறையத் தொடங்கியது.

நபி ( ஸல் ) அவர்கள் ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு நாளை ஒதுக்கியிருந்தார்கள் . அவ்வாறு தனக்கு ஒதுக்கப்பட்ட நாளை அன்னை ஆயிஷா ( ரழி ) அவர்களுக்கு ஸவ்தா ( ரழி )
விட்டுக் கொடுத்தார்கள்.

நூல் : புகாரி 2593


நபி ( ஸல் ) அவர்கள் இறுதியாக ஹஜ்ஜுக்கு சென்ற போது ஸவ்தா ( ரழி ) அவர்களும் சென்றார்கள் . அன்னை ஸவ்தா  ( ரழி ) கனத்த உடலுடையவர்களாகவும் , மெதுவாக
நடப்பவர்களாகவும் இருந்ததால் , முஸ்தலிபாவிலிருந்து மக்கள் புறப்படும் முன்பு மினா செல்ல அனுமதி கேட்டார்கள். நபி ( ஸல் ) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் . எனவே அவர்கள்
எல்லோருக்கும் முன்னால் மினாவிற்கு சென்று விட்டார்கள்.

நூல் : புகாரி 1680 , 1681

ஒருமுறை ஸவ்தா ( ரழி ) அவர்கள் தம் தேவைகளை நிறைவேற்றுவதற்காக வெளியே சென்ற போது அவர்களைத் தெரிந்தௌ கொண்ட உமர் ( ரழி ) அவர்கள் , " நீங்கள் வெளியே வராமல் இருக்கலாமே ! " என்று கூறினார்கள். அப்போது அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஆதரவாக , தம் தேவைகளை நிறைவேற்றிகொள்ள வெளியே செல்லலாம் என்ற
அனுமதியே அல்லாஹ் வழங்கினான்.

( தன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள ) ஸவ்தா பின் த் ஸம் ஆ ( ரழி ) அவர்கள் இரவில் வெளியே சென்றார்கள். அவர்களை உமர் ( ரழி ) அவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். " அல்லாஹ்வின் மீதாணையாக ! நீங்கள் ஸவ்தா ( ரழி ) தான். நீங்கள் எங்களை விட்டும் மறைந்துக் கொள்ளவில்லை " என்று கூறினார்கள். ஸவ்தா ( ரழி ) அவர்கள்
திரும்பி வந்து நபி ( ஸல் ) அவர்களிடம் விபரத்தைக் கூறினார்கள். அப்போது நபி ( ஸல் ) அவர்கள் என் அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . அவர்களின் கையில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. இந் நிலையிலேயே வஹீ வரத் தொடங்கியது. நபி ( ஸல் ) அவர்கள் ," உங்கள் தேவைகளை நிறைவேற்ற நீங்கள் வெளியே செல்ல அனுமதி
வழங்கப்பட்டுள்ளீர்கள் " எனறு கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரழி )
நூல்         : புகாரி 5237

**** அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் தர்மம் செய்வதிலும் வள்ளலாகத் திகழ்ந்துள்ளார்கள் .*******

உமர் ( ரழி ) அவர்கள் தமது ஆட்சியின் போது ஸவ்தா ( ரழி ) அவர்களுக்கு ஒரு பை நிறைய வெள்ளி நாணயங்களைக் கொடுத்தனுப்பினார்கள் . இதைப் பார்த்த அன்னை ஸவ்தா ( ரழி )
அவர்கள் " இது என்ன ? " என்று வினவினார்கள் ." வெள்ளிக் காசுகள் " என்று உமர் ( ரழி ) பதிலளித்தார்கள் . " பேரீச்சம்பழப் பை போன்றவல்லவா தெரிந்தது ?" என்று கூறி விட்டு ,
( அதை ) மற்றவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு ஸீரீன்
நூல்         : தபகாத் இப்னு ஸ அத் , பாகம் 8 , பக்கம் 56

எல்லா வகையிலும் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்களைப் பற்றி அன்னை ஆயிஷா ( ரழி ) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்..

" கூர்மையான அறிவும் , திடமான மனமும் கொண்ட ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ரழி ) அவர்களைத் தவிர வேறு எந்தப் பெண்ணைப் பார்த்தும் அவராக நான் இருக்கவேண்டும் என்று
நான் விரும்பியதில்லை " என்று ஆயிஷா ( ரழி ) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2899

ஆயிஷா ( ரழி ) யும் , ஸவ்தா ( ரழி ) யும் :

நான் நபி ( ஸல் ) அவர்களுக்காக சமைக்கப்பட்ட ஹரீராவை ( இனிப்புப் பொருள் ) கொண்டு வந்தேன். அப்போது எனக்கும் நபி ( ஸல் ) அவர்களுக்கும் இடையில் நின்ற ஸவ்தா ( ரழி )
அவர்களிடம் , "நீங்களும் சாப்பிடுங்கள் " என்றேன் . அவர்கள் மறுத்தார்கள் . நீங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்  இல்லையெனில் உங்கள் முகத்தில் இதைப் பூசி விடுவேன் . என்றேன்.
அப்போதும் மறுத்தார்கள் . நான் என் கையை ஹரீராவில் நுழைத்து அதை அவர்கள் முகத்தில் பூசினேன் . அப்போது நபி ( ஸல் ) அவர்கள் சிரித்தார்கள். பின்னர் நபி ( ஸல் ) அவர்கள் என்னைப் பிடித்துக் கொண்டு ஸவ்தா ( ரழி ) அவர்களை நோக்கி , " நீயும் ஆயிஷா முகத்தில் பூசு " என்று கூறினார்கள் . அவர்கள் என் முகத்தில் பூசிய போது நபி ( ஸல் ) அவர்கள்
சிரித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ( ரலி )
நூல்கள் : அபூ யஃலா , இப்னு அஸாகீர்

அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் நபி ( ஸல் ) அவர்கள் இறந்து பல ஆண்டுகள் கழித்து ,கி.பி 632 ம் ஆண்டு உமர் ( ரழி ) அவர்களின் ஆட்சிக் காலத்தின் கடைசி வருடத்தில் மரணமடைந்தார்கள். ஹதீஸ்களில் அன்னை ஸவ்தா ( ரழி ) அவர்கள் அறிவித்த செய்திகள் ஜந்து மட்டுமே ! அதில் ஒன்று புகாரியில் ( 6686 ஆவது செய்தியாகப் பதிவு செய்யப்படுள்ளது)









No comments:

Post a Comment