Saturday, December 9, 2017

கோட்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் அவசியமும் - பாகம் 01




                கோட்பாடுகளும் இஸ்லாம் மார்க்கத்தில் அதன் அவசியமும்

*அகீதா என்பதன் சொல்லின் கருத்து,  

                அகீதா எனும் சொல் “அக்து” என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும்.  இணைத்தல்,  கட்டுதல்  என்பதே  இதன்  பொருள்..

عَقَدْتُ عَلَيْهِ الْقَلْبَ   என்றால் என் மனதை அதனுடன் இணைத்துக் கொண்டேன். என்பதாகும். மேலும் அகீதா என்பது மனிதன் கடைப்பிடித்தொழுகும் பண்பையும் கொள்கையையும் குறிக்கும். இதன்படி நல்லொழுக்கமும் நற் கொள்கையும் உள்ள ஒருவனைப் பற்றிக் குறிப்பிடும் போது لَهُ عَقِيْدَةٌ حَسَنَةٌ  அவன் ஒரு நல்ல கொள்கைவாதி என்பர். மேலும் அகீதா என்பது உள்ளத்தின் செயலாகும். எனவே​ ஒரு பொருளின் மீது மனதுக்கிருக்கும் நம்பிக்கையையும், பற்றையும் அது குறிக்கும்.

*ஷரீஆவின் பார்வையில் அகீதா,

அல்லாஹ்வின் மீதும், அவனின் மலக்குகள், வேதங்கள், தூதர்கள், இறுதி நாள், நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நியதிப்படியே நிகழ்கின்றன என்று நம்பிகை கொள்வதாகும். இவை ஈமானின்- நம்பிக்கையின் அடிப்படைகள் எனப்படும்.  

ஷரீஆவை, கோட்பாடு சார்ந்தவை என்றும், கிரியை சார்தவை என்றும் இரண்டு பகுதி​களாக வகைப் படுத்தலாம் 

ஷரீஆ கோட்பாடுகள்,

இதற்கு செயல் வடிவமில்லை. இதற்கு உதாரணமாக   அனைத்தையும் பரிபாலிப்பவன் அல்லாஹ்தான் என்று விசுவாசம் கொள்வதையும், அவனுக்கு அடிபணிதல் கடமை என்று ஏற்றுக் கொள்வதையும், மற்றும்  முன் குறிப்பிட்ட ஈமானின் ஏனைய அடிப்படைகளின் மீது விசுவாசம் கொள்வதையும் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் அடிப்படைகள் எனப்படும்

ஷரீஆவின் கிரியைகள்,

இவற்றுக்கு  செயல் வடிவம் உண்டு, எனவே இவை செயல் வடிவங்களுடன் தொடர்புடையவை. இதற்கு தொழுகை, ஸகாத்து, நோன்பு போன்று ஏனைய கிரியைகளையும் அதன் சட்டங்களையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இவை ஷரீஆவின் கிளைகள் எனப்படும். ஏனெனில் இஸ்லாமிய கோட்பாடுகள் சீராக இருக்குமிடத்தே, அமல்கள், கிரியைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக அமையும்.

எனவே சரியான கோட்பாடுதான் மார்க்கதின் அத்திவாரமாகும். அதன் மீதே மார்க்கம் நிறுவப்பட்டுள்ளது. அது சரியாக இருக்குமிடத்தே கிரியைகளும் சரியானவையாக அமையப் பெறும். அவை தவறாக இருக்கும் பட்சத்தில் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதனையே அல்லாஹ்வின் வாக்கு இப்படி இயம்புகின்றது.

فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ﴿١١٠الكهف﴾

   “எவர் தன் இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது  (அவனையே) வணங்கி வருவாராக. (18/110)

وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٦٥﴾

“மேலும் நீங்கள் இணை வைத்தால் உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் என்று உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொருவருக்​கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது. (39/65)

فَاعْبُدِ اللَّـهَ مُخْلِصًا لَّهُ الدِّينَ ﴿٢الزمر﴾

                “முற்றிலும் அல்லாஹ’வுக்கு வழிப்பட்டு பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வாருங்கள்.” (39/2)
أَلَا لِلَّـهِ الدِّينُ الْخَالِصُ ۚ(الزمر3)

                “பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (39/3)

இத்திருவசனங்கள் கிரியைகள் யாவும், இணை வைக்கும் காரியங்களை விட்டும் நீங்கி, அல்லாஹ் ஒருவனுக்கே என்ற தூய எண்ணத்தில் மேற் கொள்ளப்பட்டாலன்றி அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவு படுத்துகின்றன. இது போன்று இன்னும் ஏராளமான வசனங்கள் இதனை வழியுறுத்துகின்றன. எனவே தான் அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் முதலில்  அகீதாவை சீர் படுத்தும் விடயத்தில் கவணம் செலுத்தினர். ஆகையால் அல்லாஹ் ஒருவனை மாத்திரம் வணங்கி அவனைத் தவிர்ந்த அனைத்து வழிபாடுகளையும் ஒதுக்கி விடும்படி தங்களின் சமூகத்தினருக்கு அவர்கள் முதலில் அழைப்பு விடுத்தனர். இதனையே அல்லாஹ்வின் திருவசனம் இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّـهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ۖ (النحل/36)

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பி வைத்தோம். அவர்கள் அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்,” என்றனர்.” (16/36)

                மேலும் ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்தாரை நோக்கி முதலில் கூறியது,

اعْبُدُوا اللَّـهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُ  (الأعراف/59)

“நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை.” (7/59) என்றுதான். இதனையே தங்களின் சமூகத்தினரிடம் நூஹ், ஹூது, ஸாலிஹ், ஷுஐப் மற்றும் ஏனைய நபிமார்கள் யாவரும் கூறினர்.

மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு  நுபுவ்வத் கிடைத்த பின்னர், அவர்கள் மக்காவில் இருந்த பதின்மூன்று ஆண்டுகளிலும் மக்களை ஏகத்துவத்தின் பால் அழைத்து அவர்களின் அகீதா கோட்பாட்டை சீர்திருத்தும் காரியத்திலேயே ஈடுபட்டிருந்தார்கள். ஏனெனில் இதுவே மார்க்கத்தின் அடிப்படை. இதன் மீதே இஸ்லாம் மாரக்கத்தின் சகல கருமங்களும் நிருவப்பட்டுள்ளன என்பதால்தான்.

 எனவே தான் எல்லா காலங்களிலும் தோன்றிய சீர்திருத்தவாதிகள் நபிமார்களினதும், ரஸுல்மார்களினதும் இந்த வழி முறையைப் பின் தொடர்ந்தனர். எனவே இதன்படி அவர்கள் தங்களின் பிரச்சாரத்தை ஏக இறை கொள்கையிலிருந்து, அதாவது அகீதா கோட்பாடுகளை சீர்திருத்தும் காரியத்திலிருந்து ஆரம்பம் செய்தனர். அதன் பின்னரே மார்க்கத்தின் ஏனைய விடயங்களின் பால் அவர்கள் கவணம் செலுத்தினர். 

                                                

No comments:

Post a Comment